Skip to main content

சிவச்சந்திரதேவன் ஐயாவுடனான மூன்று தசாப்தப் பயணம்! - இ.மாலினி

நான் முதன்முதலில் SIR  ஐச் சந்தித்த நாளை நினைவுகூர முற்படுகின்றேன்;

1990ஆம் ஆண்டு SIR  உடைய தற்போதை வீட்டில் பயிற்சி வகுப்பில் சேர்ந்திருந்தேன். சுருக்கெழுத்து ஆசிரியை சறோஜினி அக்காவையும், தட்டெழுத்து ஆசிரியை கிருஷ்ணகுமாரி அக்காவையும் மட்டுமே எனக்குத் தெரியும். கழக ஸ்தாபகரையோ செயற்குழு உறுப்பினர்களையோ தெரியாது.

திகதி ஞாபகம் இல்லை. பயிற்சி வகுப்பில் சேர்ந்து சில நாட்களின் பின்னர் தட்டச்சுப்  பயிற்சிக்காக சென்றபோது கொப்பி ஒன்று வந்து வெளியில் விழுந்தது. உள்ளே SIR  இருப்பதைக்  கண்டேன். ஆனால் யார் என்று தெரியாது. உண்மையிலேயே எனக்குப் பயமாக இருந்தது. உள்ளே போனவுடன் இவர்தான் கழக ஸ்தாபகரும் செயலாளருமென அறிந்து கொண்டேன். சுருக்கெழுத்துப் பயிற்சியின் வீட்டுவேலையைச் செய்யாமல் வந்தவரின் கொப்பிதான் வெளியில் வந்தது என அறிந்து கொண்டேன். எனக்கு மனதிற்குள் அப்பாடா  நான் கொப்பி கொண்டு வரவில்லை என்ற ஒரு திருப்தி.

SIR  இன் கண்டிப்பின் காரணமாகத்தான் பல சிறந்த சுருக்கெழுத்தாளர்கள் நீதிமன்றங்களுக்கும், திணைக்களங்களுக்கும் கிடைத்தார்கள். SIR  கழகத்தில் பல வகுப்புகளை (அரச உத்தி யோகத்தர்கள் பயன்பெறும் வகையில்) நடாத்தியதால் பலர் பயன் பெற்றுக்கொண்டார்கள். போட்டிப் பரீட்சைக்காக சுருக்கெழுத்து பயிற்சி, தட்டச்சுப் பயிற்சி, கட்டுரை வகுப்பு, பொது அறிவுக்கான பயிற்சிகள் என்பதை ஒழுங்குபடுத்தியதால் பலர் அரச தொழில் வாய்ப்பைப்  பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

அத்துடன், போட்டிப் பரீட்சைக்குக் கொண்டுசெல்வதற்கான தட்டச்சு இந்திரங்களை ஒழுங்குபடுத்துவதோடு, அதற்கான வாகன வசதியையும் ஏற்படுத்தித்தந்து, தட்டச்சு இயந்திர திருத்துநரையும் கூட்டிக்கொண்டு  SIR  உம் பரீட்சை நிலையத்திற்கு வருவார். கழகம் ஊடாக கோயில்களுக்குச் சென்றது,  இலங்கை பூராவும் சுற்றுலா சென்றது எல்லாம் மறக்க முடியாதது.

SIR  ஒழுங்குபடுத்திய பயிற்சி வகுப்புகளில் பங்குபற்றியதன் மூலமே இன்று நான் நீதிமன்ற தட்டெழுத்தாளராகக் கடமையாற்றுகின்றேன் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்வேன். SIR  ஒழுங்குபடுத்திய சுற்றுலா மூலம் பல இடங்களைப் பார்க்கும்  வாய்ப்பையும் பல கோயில்களைத் தரிசிக்கும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது.

SIRக்கு நன்றி தெரிவித்தால் மட்டும் போதாது. SIRஇன் கனவான சுருக்கெழுத்துக் கழகத்தின் வளர்ச்சியை தற்போதைய சூழலுக்கேற்ப நவீன தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்பக்  கொண்டுநடாத்துவதற்கு நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூண வேண்டும். அப்போதுதான் SIR இன் ஆத்மா சந்தோஷமடையும்.

இச்சந்தர்ப்பத்தில் கழக வளர்ச்சிக்காக என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன் என உறுதியெடுக்கின்றேன்.

SIR  இன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டுகின்றேன்.

செல்வி .மாலினி
தட்டெழுத்தாளர்,
குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம்,
யாழ்ப்பாணம்.

Comments