Skip to main content

சுருக்கெழுத்து - பவித்ரா இரமணீகரசர்மா

எழுத்துக்களை மிகவும் சுருக்கமாகவும் மிக விரைவாகவும் குறித்துக் கொள்ள உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் முறையே சுருக்கெழுத்து (shorthand/stenography) முறை ஆகும். இம்முறையானது ரோமானிய பேரரசிடமிருந்து வந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பின்னர் ஜான் ரிபர்ட் கிரேக் என்பவர் 1888ஆம் ஆண்டு இந்த முறையை மேம்படுத்தினார். முதலில் இச்சுருக்கெழுத்து ஆங்கில மொழிக்கு மாத்திரமே பயன்பட்டது. பின்னர் பிறமொழிகளுக்கும் இது பயன்பட்டதாய் அறியமுடிகிறது.

இன்று சுருக்கெழுத்து எனும் கலை அழிந்து வரும் ஒன்றாகவே கருதப்படுகிறது. கணினித் தொழில்நுட்பங்கள் பல்கிப் பெருகியதில் பெரிதும் பாதிக்கப்பட்டது இச் சுருக்கெழுத்துக் கலை ஆகும்.

அன்று சுருக்கெழுத்து முறையைத் தெரிந்து வைத்திருத்தல் என்பது வேலை கிடைப்பதற்கான பிரதான தகுதிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தெரிந்திருந்தால் stenographer வேலை இலகுவாகக் கிடைக்கும். ஆகவே அன்று பெரும்பாலான ஆண்களும் பெண்களும் இதனை ஆர்வமுடன் கற்றார்கள். தட்டச்சு (typing) கற்பதைவிட சுருக்கெழுத்துக் கற்பது கடினமாகவே இருந்தது. காரணம், இடைவிடாத பயிற்சியும் முயற்சியுமே இக்கலையில் ஒரு வல்லுனராக வருவதற்கு வழி சமைக்கும்.

தட்டச்சுக்கு எவ்வாறு fingering முக்கியமோ அதுபோல சுருக்கெழுத்துக்கு strokes முக்கியமாகும். சுருக்கெழுத்து முறையானது ஆங்கில உச்சரிப்பின் அடிப்படையிலேயே உருவானது. சுருக்கெழுத்துக் கலையில் பல முறைகள் காணப்பட்ட போதிலும் பிட்மன் (Pitman) முறையே பிரபல்யமானதாகக் காணப்பட்டது. இதனை 1837ஆம் ஆண்டளவில் கண்டறிந்தவர் ஜாக் பிட்மன் எனும் எழுத்தாளர் ஆவார்.

இதில் முதலில் வெறும் கோடுகள் தான். அதாவது P,B,T,D என்று ஆரம்பித்து பிறகு உயிரெழுத்துக்கள், புள்ளி, சின்னக்கோடு, சின்ன v வடிவில் என்று சேரும். சுருக்கெழுத்துக்கென்றே அப்பியாசக் கொப்பிகள் இருக்கின்றன. அதில் இரு கோடுகளுக்கான இடைவெளி மிகவும் அதிகமாக இருக்கும்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கும் அதிகமாக மக்கள் இம்முறையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இம்முறையில் குறிப்பெடுக்கும் வழக்கமும் அற்றுப் போகவே இதனைப் போதிக்கும் மையங்களும் குறையத் தொடங்கின.

இச்சுருக்கெழுத்து முறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களால் நிமிடத்திற்கு 200ற்கும் அதிகமான வார்த்தைகளைக் குறிப்பெடுத்துக் கொள்ளமுடிகிறது. மின்னணு தொழில்நுட்பத்துடன் குரலைப் பதிவு செய்வது, நிகழ்வுகளை டுவீட் செய்யும் இந்த யுகத்தில் சுருக்கெழுத்துக்கான தேவை குறைந்துள்ளதோடு, அதன் எதிர்காலமும் கேள்விக் குறியாகியே உள்ளது.

பத்திரிகைத்துறை முதல் நீதித்துறை வரை இன்றும் இதன் அவசியம் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். எவ்வாறெனினும் சுருக்கெழுத்து முறையை இந்நவீன தலைமுறை கற்குமா? எனும் கேள்வி நமக்குள் எழுந்தே தீருகிறது.

புதிய தொழில்நுட்பங்களில் குரலைப் பதிவு செய்து அனுப்பிய பிற்பாடு அதனை மீண்டும் கேட்டு தட்டச்சினை மேற்கொள்வதை விட சுருக்கெழுத்து முறை மூலம் சேகரித்த தகவல்களைத் தட்டச்சு செய்வது மூன்று தடவை விரைவானதுஎன பிரிட்டனில் உள்ள சொல்லுக்கு சொல் மொழிபெயர்ப்பவர்களின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வளவு தொழில்நுட்பம் முன்னேறிக்கொண்டு சென்றாலும் சுருக்கெழுத்து எனும் பாரம்பரியக் கலை அதன் தேவையை என்றுமே இழந்துவிடாது.

 

பவித்ரா இரமணீகரசர்மா

Comments